தான் ஆடாவிட்டாலும்...


மருத்துவமனையில் பிரசவத்திற்காக தன் மனைவியை உள்ளே அனுப்பி விட்டு தவித்துக் கொண்டிருந்தான் கணவன்.

வீட்டில் சம்மதம் இல்லாமல் நடந்த திருமணம்.
அந்த பெண்வீட்டார்கள் மகள் இறந்து விட்டாள் என்றே கூறிவிட்டார்கள். 

துணைக்கு யாரும் இல்லாமலே தாய்க்கு தாயாக இருந்து அவளை கண்ணும் கருத்துமாக பார்த்து இன்று இவ்வளவு தூரத்திற்கு அழைத்து வந்த அவனுக்கு இப்பொழுது சற்று பயமாகவே இருந்தது.

 ஒரு வருட காலமாக பேசாத அவன் அன்று தன் தாய்க்கு போன் செய்கிறான்.

"அம்மா மருத்துவமனையில் யாரும் இன்றி அனாதையாக நிற்கிறேன், உள்ளே அவள் வயிற்று பிள்ளையுடன் போராடுகிறாள் ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லா அனாதையாக நிற்கிறேனம்மா..."

கேட்ட அம்மா பதில் ஏதும் சொல்லாமல் அழுதவாறே போனை கீழே வைத்து விட்டு நிற்க, அப்பா "யாரிடம் பேசினாய்" என கேட்க,

அம்மா விபரத்தை சொன்னாள். சிறிய மௌனத்திற்கு பிறகு "உன் மகன் செய்த தவறுக்கு அந்த பெண் என்ன செய்வாள்? நீ போய் பார்த்து விட்டு வா..
ஆனால் நான் செத்தாலும் அவன் முகத்தில் விழிக்க மாட்டேன்" என்றார்.

அம்மா கிளம்பி வெளியே போன சில நிமிடங்களில்  போன் அழைப்பு வர அதை அப்பா எடுக்கிறார்.

போனில் செல்ல மகனின் குரல் "அம்மா ஆண் குழந்தை பிறந்திருக்கிறதம்மா பார்ப்பதற்கு அப்பாவை போலவே உள்ளதம்மா அப்பா பாக்க வருவாரா. '

மறு நொடி கைககள் நடுங்கி அப்பாவின் கண்கள் குளமாக கண்ணீர் வர ஆரம்பித்தது.

முகத்திலேயே விழிக்கமாட்டேன் என்ற அப்பா சட்டையை போட்டுக்கொண்டு அம்மாவை பின் தொடர்ந்தார்.

யாராவது வருவார்களா தன் குழந்தையை பார்க்க என்ற ஏக்கத்தில் மகன் நிற்க வாசலில் அம்மாவை பார்த்ததும் அப்படி ஒரு சந்தோசம் சிறு குழந்தை போல் அம்மாவின் கைகளை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.

பிறகு உள்ளே சென்று குழந்தையை கொஞ்சிய அம்மா பின்னால் வந்த அப்பாவை மகன் பார்க்கவில்லை. அப்பா கதவருகே நின்று நடப்பதை பார்த்தவாறே தன்னை யாராவது அழைத்தவுடன் போகலாம் என இருந்தார்..

அப்போது மயக்கத்தில் இருந்த மருமகள் கண் விழித்து மாமியாரை பார்த்தவுடன் ஆனந்த கண்ணீர் வர ஆரம்பித்தது.

அவள் மாமியாரின் கைகளை பிடித்தவாறே ஒரு வார்த்தை சொன்னாள்..

"இதோ இப்பொழுது பிறந்திருக்கிறதே என் குழந்தை, இது எப்படி வளருமோ அது எனக்கு தெரியாது.. ஆனால் நீங்கள் பெற்ற குழந்தை போல் இனி ஒரு குழந்தை எனக்கு கிடைக்காது. அப்படி என்னை பார்த்து கொண்டார்..." என்றவுடன் தாய் தன் மகனை பெற்ற பலனை அடைந்து ஆனந்தக் கண்ணீர் விட்டாள்..

பிறகு "அத்தை, மாமா வரவில்லையா" என கேட்க வாசலில் நின்ற மாமனாருக்கு கால்கள் தன்னையும் மீறி உள்ளே ஓடப் பார்த்தது.

அவள் கணவனிடம் கேட்டாள் "அம்மாவுக்கு தான் உங்களை மிகவும் பிடிக்குமா? அப்பாவுக்கு பிடிக்காதா?" என்றவுடன், அப்பா மகன் என்ன சொல்வான் என பார்க்க..

மகன் சொன்னான்  "அம்மா சிறு வயதில் நான் நடந்து செல்லும் போது வழியில் சிறு பள்ளம் வந்தால் பயந்து போய் என்னை இடுப்பில் தூக்கி வைத்து கொள்வார்கள்..

ஆனால் என் அப்பாவோ, என் கைகளை பிடித்து கொண்டு மகனே, நான் இருக்கேன்டா.. தாண்டுடா இந்த பள்ளத்தை.. என்பார். 

அவர் காட்டிய தைரியம் தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது" என்றதும் கேட்ட அப்பா ஓடி வந்து மகனை கட்டி பிடித்து அழ ஆரம்பிக்க, 

அவர்களை பார்த்து அனைவரும் அழ அங்கே ஆனந்த கண்ணீர் அற்புதமாய் கரை புரண்டோடியது......

அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் பிள்ளைகளை ஏமாற்றியதில்லை...

Comments

Popular posts from this blog

அப்பாவுடன் பயணம்

அப்பாவின் மதிப்பு